வெள்ளி, 8 பிப்ரவரி, 2019

மேல்மலையனூர் தல வரலாறு





ஆதியில் தோன்றிய சக்தியே ஆதிசக்தி என போற்றப்படுகிறாள். இவள் தனது மந்திரங்களால் ஐந்தொழில்களை நடத்த பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், மகேசுவரன், சதாசிவன் என ஐவரைப் படைத்தாள். இவர்கள் பஞ்சபூதங்களைப் படைத்து உலகை நடத்தி வருகின்றனர்.

தட்சன் சக்தியை வேண்டி தவம் செய்து சக்தியே தனது மகளாக பிறக்க வேண்டும் என வரம் பெற்றான். இதில் பிரம்மனால் பிரஜாபதியாக படைக்கப்பட்ட தட்சனுக்கு மகளாகத் தோன்றியவள் தாட்சாயணி.  தாட்சாயிணியை பரமேஸ்வரனுக்கு மணமுடித்தான் தட்சன்.

ஒருமுறை தட்சன், சிவன் தலைமையிலான ஒரு கூட்டத்திற்கு வந்தபோது சிவன் தட்சனுக்கு எழுந்து மரியாதை செய்யவில்லை. இதனால் தான் அவமானப் படுத்தப்பட்டதாக நினைத்த தட்சன் சிவனிடம் கோபம் கொண்டான்.
மாபெரும் யாகம் ஒன்றை நடத்தத் தொடங்கினான் தட்சன். அனைவருக்கும் அழைப்பு அனுப்பிய தட்சன், சிவபெருமானுக்கு மட்டும் அழைப்பு அனுப்பவில்லை.

தன் தந்தையான தட்சனின் செயலைக் கண்டு கோபமடைந்த பார்வதி நேரே தட்சனிடம் சென்றாள். தாட்சாயணியான தனக்கும் தன் கணவரான சிவபெருமானுக்கும் உரிய பங்கை தர வேண்டும் என தந்தையிடம் போராடினாள். தாட்சாயணிக்கு உரிய மதிப்பையும் மரியாதையையும் தர மறுத்தான் தட்சன். சினம் கொண்ட பார்வதிதேவி, தட்சனை சபித்தாள். ஆணவத்தால் சிவபெருமானை மதிக்காமல் நடத்திய யாகத்தைத் தடுக்கச் சென்ற தாட்சாயணி, தன் பூத உடலை யாகத்தீயில் வீழ்த்தினாள்.

நடந்ததை அறிந்த சிவபெருமான் கோபம் கொண்டார். அவரது நெற்றிக் கண்ணில் இருந்து வீரபத்ரர் தோன்றிதட்சன் யாகத்திற்காக தயார் செய்திருந்த யாக குண்டத்தை துவம்சம் செய்தார்.

தாக்ஷாயணி அவதாரத்தில் தக்ஷனின் யாக குண்டத்தில் விழுந்து உயிரை விட்ட சக்தியின் உயிரற்ற உடலைத் தூக்கிக்கொண்டு விண்ணுக்கும், மண்ணுக்கும் அலைந்து திரிந்த ஈசனின் துயரத்தைக் கண்டு சகிக்கமாட்டாமல் மஹாவிஷ்ணு தன் சுதர்சன சக்கரத்தால் அவள் உடலைத் துண்டு துண்டுகளாக அறுந்து விழும்படிச் செய்தார்.

அப்படி அம்மனின் உடல் உறுப்புகள் விழுந்த இடங்கள் அனைத்துமே மகிமை பொருந்தியதோடு அல்லாமல் அம்பிகையில் உடலே பீஜாக்ஷரங்களால் ஆனது என்பதால் ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு சக்தி பீடமும் உருவானது. 51 துண்டுகளாக விழுந்த சக்தியில் விழுந்த இடங்களில் 51 சக்தி பீடங்கள் உண்டாகின.

இப்படி அறுந்து துண்டாக விழுந்த அம்பிகையின் வலக்கையின் புஜம் விழுந்த இடம் மேல்மலையனூர் என்று கூறப்படுகிறது. இதையே தண்டகாரண்யம் என்றும் சொல்கின்றனர். வலக்கை புஜமே முதன்முதலாக விழுந்தது என்பதால் மேல்மலையனூர் முதலாவது சக்தி பீடமாக கருதப்படுகிறது.

அங்காளியே இப்படிக் கோயில் கொண்டாள் என்றும் இந்த மேல் மலையனூரே ஆதி சக்தி பீடம் என்றும் கூறுகின்றனர். இவள் சண்டி, முண்டி, வீரி, வேதாளி, சாமுண்டி, பைரவி, பத்ரகாளி, எண்டோளி, தாரகாரி, அமைச்சி, அமைச்சாரி, பெரியாயி, ஆயி, மகாமாயி, அங்காயி, மாகாளி, திரிசூலி, காமாட்சி, மீனாக்ஷி, அருளாட்சி, அம்பிகை, விசாலாக்ஷி, அகிலாண்டேசுவரி என்ற பெயர்களில் எண்ணற்ற சக்திபீடங்களின் தேவதையாக விளங்குகின்றாள்.

தொன்மைச் சிறப்பு:

  பழங்காலத்தில் தண்டகாரண்யப் பகுதியின் மையப்பகுதியாக மலையனூர் திகழ்ந்தது.

இந்தப் பகுதியை ஆட்சி செய்த கடைஏழு வள்ளல்களின் வழி வந்த சிற்றரசனான மலையன் என்ற மன்னனின் பெயரால் இவ்வூர் மலையனூர் என அழைக்கப்படுகிறது.

அன்னை பூங்காவனத்தில் தோன்றியதால் பூங்காவனத்தாள் என்றும் அழைக்கப்படுகிறாள்.

சங்க இலக்கியங்களுள் ஒன்றான பதிற்றுப்பத்திலும் இவ்வன்னையைப் பற்றிய குறிப்பு காணப்படுகின்றது.

செஞ்சியை ஆண்ட தேசிங்குராஜன் காலத்தில் வெட்டப்பட்ட பெரிய ஏரி ஒன்றும் இந்த பகுதியில் இருக்கிறது. இவை அனைத்துமே இவ்வூரின் தொன்மையை எடுத்துக்காட்டுகின்றன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக